Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசமான திருவள்ளூர் வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் மூலவருக்கு தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் கோவிலுக்கு சென்று, சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து வழிபடுவார்கள். ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் இக்கோவிலில் திதி கொடுக்க வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.
அந்த வகையில் இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். அதன்படி இன்று (டிச 2) முதல் 5ம் தேதி வரை மூலவர் வீரராகவப் பெருமாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதை தொடர்ந்து 6ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை, தைலக்காப்பு நடைபெறும்.
தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும். முகம் மற்றும் பாதத்தை, பக்தர்கள் தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b