Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை அண்ணா சாலையில், பி.எஸ்.என்.எல் மத்திய மண்டலம் அலுவலகம் இயங்கி வருகிறது. 8 மாடி கொண்ட இக்கட்டடத்தில், இரண்டாவது மாடியில் இருந்து இன்று (20-12-25) காலை திடீரென கரும்புகை வெளியேறியது. அதனை தொடர்ந்து அந்த கரும்புகை மளமளவென பரவத் தொடங்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சர்வர் அறை உள்ள கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலையிலேயே ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தின் போது அலுவலகத்துக்குள் ஒரு நபர் மட்டுமே இருந்ததால் அவர் உடனடியாக வெளியே அழைத்து வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால் இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b