Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 20 டிசம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் வசித்து வருபவர் ஜெகன்னாதன். இவரது மனைவி சாந்தி. தம்பதிக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு காஞ்சிபுரம், செங்கழுநீரோடை தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. (தற்போது வயது 34). அந்த குழந்தைக்கு பெற்றோர் தினேஷ் என பெயரிட்டுள்ளனர்.
பிறந்த ஒரு மாதத்திலேயே குழந்தை மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும், அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் வலது கையில் ஊசி செலுத்தும்போது கை வீங்கியதால் வலது கையை அறுவை சிகிச்சை செய்தால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் வலது கை முழங்கை வரை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தவறான மற்றும் கவனக்குறைவான சிகிச்சையால் எனது மகன் தினேஷின் வலது கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டனர் என்று ஜெகன்னாதன் நுகர்வோர் நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் மூலமாக வழக்கு தொடர்ந்தார்.
இலவச சேவை நுகர்வோர் சட்டத்துக்குள் வராது என்பதால் சார்பு நீதிமன்றத்திற்கும், அதனைத் தொடர்ந்து வழக்கை விரைவாக முடிக்க விரைவு நீதிமன்றத்துக்கும் ஜெகன்னாதன் சென்றுள்ளார். அங்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என ஜெகன்னாதன் கேட்டதால் தொகை அதிகார வரம்புக்குள் வராது என, விரைவு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
விடா முயற்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன்னாதன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றமே விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாணைக்கு எடுத்துக்கொண்டது. மனுதாரர் தரப்பில் இலவச சட்ட உதவி மையத்தின் வழக்கறிஞர் என்.கீதா ஆஜரானார்.
எதிர் மனுதாரர்களான காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தமிழக அரசின் சுகாதார துறை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
முடிவில் 3 பேரும் இழப்பீடாக பாதிக்கப்பட்ட தினேஷுக்கு ரூ.10 லட்சம், வழக்கு தொடுத்த 1998 ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் வரை 6 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி தீர்ப்பளித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கூறுகையில்,
கடந்த 34 ஆண்டு காலமாக என் தந்தை - தாய் ஆகியோரின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
தற்போது அளித்த இழப்பீட்டுத் தொகைக்கு பதிலாக எனக்கு ஏதாவது அரசு வேலை வழங்கினால் கடைசி காலத்தில் என் பெற்றோருக்கு உதவ இயலும் என்று இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN