Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இது குறித்த முதல்வரின் பயணத்திட்டம் வெளியாகியுள்ளது.
அதன்படி முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.
அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் சாரதா கல்லூரி அருகிலும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பாலம் அருகே மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் நிர்வாகிகளை சந்திக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று
அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் மின்னொளியில் ஜொலிக்கும் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு கட்டிடமாக சென்று பார்வையிடுகிறார். இதற்காக பிரத்யேக மின்சார வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.
விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 50 புதிய பஸ் போக்குவரத்து சேவையையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
Hindusthan Samachar / vidya.b