Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 20 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 42 வயது பெண். இவருடைய கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இந்த நிலையில், கணவன் மறைவுக்கு பிறகு அந்த பெண் தனியாக தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
அவரது இரண்டு மகள்களில் மூத்த மகளுக்கு திருமணமாகி அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இரண்டாவது மகளுக்கு 18 வயது ஆகும் நிலையில், அவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
கணவனை இழந்த அந்த 42 வயது பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் கந்தன் என்ற 31 வயது நபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 13, 2025 அன்று தாய் மற்றும் தங்கை காணாமல் போனதாக மூத்த மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன தாய் மற்றும் மகளை தேடி வந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த 42 வயது பெண்ணின் செல்போன் எண்ணை போலீசார் சோதனை செய்ததில் அது அவர் கேரளாவில் இருப்பதாக காட்டியுள்ளது. இந்த நிலையில், கேரளாவுக்கு சென்ற போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு காணாமல் போனதாக கூறப்பட்ட தாய், மகள் மற்றும் அந்த பெண்ணின் கள்ளக்காதலன் என மூன்று பேரும் இருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் இருந்த அவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் தனது வாயில் துணையை வைத்து அடைத்து கடத்திச் சென்று தனக்கு கட்டாய தாலி கட்டியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த இளம் பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இவற்றுக்கு தனது தாய் உடந்தையாக இருந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இளம் பெண்ணின் தாய் மற்றும் அவரது காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட இளம் பெண்ணை அவரது அக்காவிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN