Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 20 டிசம்பர் (ஹி.ச.)
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால்
அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா
வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று
தொடங்கியது.
பகல் பத்து முதல் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர்
நம்பெருமாள் பச்சை பட்டு உடுத்தி, கல் இழைத்த நேர் கிரீடம், சிறிய
நெற்றிசுட்டி பதக்கம், மார்பில் பங்குனி உத்திர பதக்கம், ஸ்ரீ ரங்க நாச்சியார்
பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள்,
நெல்லிக்காய் மாலை, 8 வட முத்துமாலை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள்
அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு
காட்சி அளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி கோசத்துடன்
நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு
மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் வரும் டிசம்பர் 29- ம் தேதி மோகினி
அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார்.
அதன் பின்னர் இராப்பத்து
வைபத்தின் முதல் நாளான வரும் டிசம்பர் ஜனவரி 30-ம் தேதி அதிகாலை 4.30- மணி
அளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க
வாசல் திறப்பு நடைபெறும்.
அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள்
அதிகாலை 5.45 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார்.
இதில் பல
லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கா ரங்கா என பக்தி
கோசத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.
அதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி கைத்தல சேவையும், ஜனவரி மாதம்
6ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடைபெறும்.
அப்போது நம்பெருமாள்
தங்க குதிரையில் வலம் வருவார்.
ஜனவரி மாதம் 8ம் தேதி தீர்த்தவாரி நம்பெருமாள் கண்டருளுவார். ஜனவரி மாதம் 9ம்
தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுறும்.
21 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தின் போது மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர்
பெருமாளுக்கு முத்தங்கியுடன் சேவை சாதித்தருளுவார்.
வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதில்
இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை கோயில்
நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீரங்கத்திற்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
வைகுண்ட
ஏகாதெசி பெருவிழா காரணமாக ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam