Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரும் 24 முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வரும் 23-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடந்து கிறிஸ்மஸ் பண்டிகை, மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி வருகின்ற 23ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்வதற்கு 1400 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படும், ஆனால் தற்போது குறைந்தபட்சம் 2000 முதல் 4500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு வழக்கமான நாட்களில் 800 ரூபாய் முதல் 1200 வரை வசூலிக்கப்படும் ஆனால் தற்போது 3000 முதல் 5000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு வழக்கமான நாட்களில் 700 ரூபாய் முதல் 1100 வரை வசூலிக்கப்படும் ஆனால் தற்போது அதிகபட்சமாக 4000 ரூபாய் வரை அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு 900 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் ஆனால் தற்போது பண்டிகை நாட்களையொட்டி 4000 ரூபாய் வரை அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையிலிருந்து திருச்சி வழக்கமாக 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை வசூலிக்கப்படும் ஆனால் தற்போது அதிகபட்சமாக 3600 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், தமிழக அரசு ஒவ்வொரு விடுமுறை நாட்களின் போதும்,பண்டிகை நாட்களின் போதும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கட்டண உயர்வு தொடர்பாக எச்சரித்து ஆய்வு மேற்கொண்டாலும்.
இது போன்ற தொடர் நடவடிக்கைகளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்
எனவே தமிழக அரசு ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ