Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 21 டிசம்பர் (ஹி.ச.)
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று தொடங்கியது.
பகல் பத்து 2ஆம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் வெண்பட்டு அணிந்து முத்துப்பாண்டியன் கொண்டை, கலிங்கத்துராய் , சிகப்பு கல் நெற்றி பட்டை, மார்பில் கண்டாபரணம், ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், பூஜ கீர்த்தி, நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவள மாலை, பெரிய சிகப்பு கல் அடுக்கு பதக்கம், சிகப்பு கல் அபயகஸ்தம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி கோசத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் வரும் டிசம்பர் 29- ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார்.
அதன் பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான வரும் டிசம்பர் ஜனவரி 30-ம் தேதி அதிகாலை 4.30- மணி அளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார்.
இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கா ரங்கா என பக்தி கோசத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.
Hindusthan Samachar / GOKILA arumugam