Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச)
சென்னை மற்றும் புறநகர் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மின்சார ரயில் சேவையை பொருத்த வரை, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி உட்பட பல வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
பொதுவாக மின்சார ரெயில்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயணிப்பதால், எப்போதும் இந்த நேரங்களில் ரெயில்களில் கூட்டம் இருக்கும்.
இந்த நிலையில், ரெயில் கட்டணம் வரும் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்புகளில் 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கிறது. 500 கிலோ மீட்டர் வரையிலான ரெயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரெயில் கட்டண உயர்வு மூலம் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் ரெயில் டிக்கெட் கட்டணமானது வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
எனினும், புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும், சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை எனவும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b