2026 ம் ஆண்டு தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளுக்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது - சசிகலா
சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் மூத்த குடிமக்களுடன் வி.கே.சசிகலா கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக - பாஜக கூட்ட
Sasikala


சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் மூத்த குடிமக்களுடன் வி.கே.சசிகலா கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எதுவுமில்லை. மேலும் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தத்தில் மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது ஏற்கனவே உள்ள நடைமுறை தான்.

அதில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்காமல் பெயர் மாற்றம் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து வருவதாக., திமுகவை விமர்சனம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களின் நிலைப்பாடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2026 தேர்தல் தொடர்பாக நாள்தோறும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில்., நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற மறுப்பதன் காரணமாக அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போராடி வருவதாகவும், செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக எதுவுமே தெரியாமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது மா.சுப்பிரமணியன் விமர்சனம் வைத்து வருவதாகவும் சசிகலா கூறினார்.

திமுக ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் எனவும், எதிர்த்து பேசினால் வேட்டைக்கு செல்வது போல சென்று காவல்துறையினர் கைது செய்யும் அளவுக்கு கேவலமான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் சசிகலா விமர்சனம் செய்தார்.

மேலும் கடந்த காலத்தில் சிலர் செய்த தவறின் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ