உலகில் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம் - அன்புமணி கிறிஸ்துமஸ் வாழ்த்து!
தமிழ்நாடு, 24 டிசம்பர் (ஹி.ச.) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; மன்னிப்பது மட்டுமே மகத்தான மனிதகுணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்
அன்புமணி


தமிழ்நாடு, 24 டிசம்பர் (ஹி.ச.)

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

மன்னிப்பது மட்டுமே மகத்தான மனிதகுணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.

இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஆகும்.

இயேசு பிரான் போதித்ததைப் போலவே உலகில் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்; கருணை காட்டுவோம்.

அதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும். அனைவருக்கும் எனது கிறித்துமஸ் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam