Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, சமையல் செய்வதற்காக 'கேஸ்' அடுப்பை பற்ற வைத்த நிலையில், தீடீரென பைபர் படகு தீப்பிடித்ததால், மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜெகன் (35) என்ற மீனவர். இவர் நேற்று, சக மீனவர்களான வாசு, ராஜு, தீனா ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க சென்றார்.
பழவேற்காடு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். மதிய உணவு சமைப்பதற்காக, படகில் இருந்த 'காஸ்' அடுப்பை பற்ற வைத்தனர்.
அப்போது, திடீரென தீ பரவி பைபர் படகு எரிய துவங்கியது. அதனருகே இருந்த மோட்டார் இயந்திரமும் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த மீனவர்கள், திடீரென கடலில் குதித்தனர்.
தண்ணீரில் தத்தளித்த அவர்களை, அருகே மீன்பிடித்து கொண்டிருந்த பழவேற்காடு பகுதி மீனவர்கள் மீட்டனர். எரிந்து கொண்டிருந்த படகையும் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதற்குள் படகின் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகின.
சேதமான படகு, மற்றொரு படகில் கயிறு மூலம் கட்டி பழவேற்காடு கரைக்கு இழுத்து வரப்பட்டது. இந்த தீ விபத்தில், ஜெகனுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் பெற்று வந்தவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ