ஊட்டியில் உறைபனியைக் காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை - வனத்துறை அறிவிப்பு
நீலகிரி, 24 டிசம்பர் (ஹி.ச) தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் சீசன் காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்ப
ஊட்டியில் உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை - வனத்துறை அறிவிப்பு


நீலகிரி, 24 டிசம்பர் (ஹி.ச)

தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் சீசன் காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் நீர் பனிப்பொழிவும், அதைத்தொடர்ந்து உறைபனி தாக்கமும் நிலவும் நிலையில் நீலகிரியில் கடந்த சில வாரங்களாக புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.

அதோடு மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண காலநிலை நிலவி வந்ததாலும், பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறை பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருக்கிறது. தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள், மேரக்காய் பந்தல்களின் மேல் பகுதி முழுவதும் உறைபனி கொட்டி படிந்து இருந்ததால், பச்சை நிறத்தில் இருந்த அவை வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. மேலும், வாகனங்களின் மேல் உறைபனி கொட்டி இருக்கிறது.

அரசு தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, காந்தள், அவலாஞ்சியில் தொடர்ந்து காலை நேரங்களில் ஐந்து டிகிரி செல்சியஸ்-க்கும் கீழ் வெப்பம் பதிவாகி வருவதால் கடும் குளிர் நிலை காணப்படுகிறது.

காலை 8 மணியாகியும் வெயில் வந்தும் கூட உறைபனி ஆவியாகாமல் இருக்கிறது. உறைபனி கொட்டி வருவதால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கம்பளி ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஊட்டியில் நிலவும் உறைபனியை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டி உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b