Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)
கிறிஸ்வர்களால் இறைவனாக போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று கிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகை நாளான இன்று, உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் ஆட்டு கொட்டகையுடன் கூடிய குடிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை, மதுரை, கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
பின்னர் குழந்தை இயேசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Hindusthan Samachar / vidya.b