Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 26 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த 2004 டிசம்பர் 26 -ஆம் தேதி, உலகின் பல்வேறு நாடுகளை போல, தமிழ்நாட்டுக்கும் மறக்க முடியாத துயர நாளாக அமைந்தது.
அன்றைய தினம் தமிழக கடலோர பகுதிகளை ஆழிப்பேரலை எனும் சுனாமி தாக்கியது. அதற்குமுன் சுனாமி என்ற பெயரை கூட கேள்விப்படாத கடலோர பகுதிகளில் வசித்த மக்கள், மீனவ சமூதாயத்தினர் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தை கண்ணெதிரே கண்டு அதிர்ந்துதான் போனார்கள்.
தெற்கே கன்னியாகுமரியிலிருந்து வடக்கே சென்னை வரை பல்வேறு கடற்கரை கிராமங்களை வாரி சுருட்டிய சுனாமியின் அகோர பசிக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களும் இரையாகின. பல்வேறு இடங்களில் மீனவர்களின் படகுகள், உபகரணங்கள், குடியிருக்கும் வீடுகள் என அனைத்தும் சேதமாகி மீனவர்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஊரெங்கும் சுனாமி வந்து அழிவை சந்திந்த அந்த மோசமான வேளையில், கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையை மட்டும் கடலலைகள் தாக்காமல், கடல் உள்வாங்கிச் சென்றது ஒரு அற்புதம் என்று இன்றைக்கு முருக பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகின்றனர். இந்த அற்புத நிகழ்வால் முருகனை 'கடல் காத்த கந்தன்' என பக்தர்கள் அழைக்கிறார்கள்.
இது திருச்செந்தூர் கோயிலின் ஆன்மீக சக்தியையும், அதன் வடிவமைப்பின் சிறப்பையும் எடுத்துரைப்பதாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சுனாமியிலிருந்து கோயிலையும் சுற்றுப்புறத்தையும் காப்பாற்றியதால் அன்று முதல் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு சுனாமியை வென்ற சுப்ரமணிய சுவாமி என்ற பெயரும் உண்டு.
இந்த கோயில் முருகனின் ஆறு படை வீட்டில் இரண்டாம் படை வீடாகும்.
தற்போது பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வரும் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்களும் திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN