Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 27 டிசம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி அருகே கொங்கலாபுரத்த்தை சேர்ந்தவர் ராஜாமணி-ராஜேஸ்வரி தம்பதி.
சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரிக்கு 11 வயதில் கவின் என்ற மகனும் 9 வயதில் கமலிகா என்ற பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பெண் காவலர் ராஜேஸ்வரியின் சகோதரியான சங்கரன்கோவிலை சேர்ந்த தனலட்சுமி தனது 6 வயது மகன் நிஷாந்த் மற்றும் 4 வயது மகள் ரிஷிகாவுடன் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேஸ்வரியின் வீட்டின் முன்பாக உள்ள கேட்டில் கமலிகாவும், ரிஷிகாவும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கேட்டுடன் சுவர் சரிந்து விழுந்ததில் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் கமலிகா 9, மற்றும் ரிஷிகா 4, ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தனர்.
இதை அடுத்து இருவரையும் மீட்ட உறவினர்கள் உடனடியாக சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீட்டின் கேட் சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J