Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 டிசம்பர் (ஹி.ச)
பாமக நிறுவனர் ராமதாஸ் டிசம்பர் 29 சேலத்தில் கூட்டும் பொதுக்குழுவிற்கு அனைவரும் வரவேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:
உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, உங்களிடம் இன்று பேசப்போகிறேன்.பேச போற எனக்கு தொண்டை அடைக்கிறது ஆனால் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
இப்போ வெளியில் நடக்கும் சண்டையை குடும்ப சண்டைக்காக பார்க்க வேண்டாம்.இது ஈகோ பிரச்சனை அல்ல, கோபம் அல்ல, இது நான் பெற்றெடுத்த இயக்கத்தோடு ஆன்மாவை காப்பாற்ற நடக்கும்போர்.
கடந்த சில வாரங்களா அன்புமணி கும்பல்ல உள்ள சிலர் என்ன பத்தி என்னென்னவோ சொல்றாங்க, ஐயாவுக்கு வயசாயிடுச்சு, புத்தி பேதளிச்சிருச்சு,சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று அசிங்கப்படுத்துகிறார்கள்.
அவங்க என்னை என்ன வேண்டுமானாலும் lசொல்லட்டும் பழி சுமத்தட்டும் அது தாங்கிக்கிற சக்தி இந்த இதயத்துக்கு இருக்கு.
ஆனா என் உழைப்புல உருவான இந்த கட்சியை தயவு செய்து காயப்படுத்தாதீங்க. இந்தக் கட்சி எனக்கு யாரும் கொடுத்த சீதனம் அல்ல இது எனக்கு பரம்பரையா வந்த சொத்தும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் என் ரத்தத்தை வேர்வையை சிந்தி நான் கட்டின மக்கள் கோட்டை. இதுக்காக தியாகம் பண்ணி இருக்கேன். வெறும் பதவிக்காக இல்லை என் மக்களுக்காக.
ஆனா இன்னைக்கு கண்ணு முன்னாடி இந்த கட்சி பலவீனமா நிக்கிறப்போ பெத்த வயிறு பத்தி எரியுது . உண்மைதான் நான் என் மகன் அன்புமணியை நம்பினேன் அது நான் செய்த மிகப்பெரிய தவறு. சேர்ந்து இந்த இயக்கத்தை காப்பாற்றுவோம் என்று நினைத்தேன் அவனை ஒரு நல்ல தலைவனா செதுக்கலாம் என்று பார்த்தேன் ஆனா இன்னைக்கு கசப்பான உண்மை புரிந்தது.
சிலைகளை தான் செதுக்க முடியுமே தவிர சில பேரை செதுக்கவே முடியாது. மாற்றவே முடியாது. தலைமை என்பது அப்பன் வீட்டு சொத்து மாதிரி வாரிசா வர்றது இல்ல அது உழைப்பால், தியாகத்தில் வரணும்.
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க அன்புமணிக்கு என்ன வாய்ப்பு கொடுக்கவில்லை, எம்பி பதவி, மத்திய அமைச்சர் பதவி, தேர்தலில் தோற்ற பிறகும் ராஜ்யசபா பதவி என எல்லாமே கொடுத்தோம்.
ஆனால் பொறுப்பு வந்தால் மட்டும் போதாது பொறுப்புணர்ச்சியும் வேண்டும். ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று சொல்ற மாதிரி அன்புமணி தன்னோட பொறுப்பு சரியா செயல்படுத்த வில்லை என்பதற்கு உதாரணம் சொல்லுறேன்.
தேசிய சராசரி வருகை பதிவேட்டில் மற்ற எம்பிக்களின் வருகை பதிவு 79 சதவீதம் அன்புமணியின் வருகை பதிவு 30 சதவீதம் மற்ற எம்பிக்கள் கலந்து கொண்ட விவாதங்களின் எண்ணிக்கை 79 ஆனால் அன்புமணி வெறும் ஏழு விவாதங்களில் தான் பங்கேற்று உள்ளார்.
எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது மனசு வலிக்குது, அவமானமா இருக்குது. ஒருத்தரை நம்பி நாம் பொறுப்பு கொடுத்தோம்னா மக்களுக்காக உழைக்கணும் ஆனால் அவரை வீட்டில் உட்கார்ந்து எப்படி எம்பி பதவியை வீணடிச்சாரோ அதே மாதிரி கட்சியிலையும் 1008 உதாரணங்கள் உள்ளது. ஒழுங்காக களப்பணி ஆற்றவில்லை. தொண்டர்களை சந்திக்கவில்லை. இதுதான் உழைப்பா? இல்லை இதுதான் மிதப்பா?.
ஒரு காலத்தில் 20 எம்எல்ஏக்கள் இந்த கட்சிக்கு இருந்தது. இன்னைக்கு அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது ஏன் தெரியுமா? உழைக்க வேண்டிய இடத்தில் உரிமை கொண்டாடிட்டு இருந்தோம். என்னை ஏமாத்தினவர்கள மன்னிப்பேன். என்னை நம்பி வந்த தொண்டர்களை ஏமாத்த விட மாட்டேன்.
எனக்கு இந்த வயசுல பதவியோ அதிகாரமோ தேவையில்லை. நான் கட்டின இந்த வீட்டை உங்களுக்காக காப்பாற்றவே முன்னாடி வந்து நிற்கிறேன். இந்த கட்சியை காப்பாத்த சில உறவுகளை விளக்கணுமா? ஏற்கனவே அதையெல்லாம் தள்ளி விட்டு வந்துள்ளேன்.
சட்டப்படியும் யோசித்துப் பாருங்கள் இன்றைக்கு தலைமைப்பதவியே நீதிமன்றத்தில் உள்ளது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் வந்தால் அந்த கட்டிடம் எப்படி நிற்கும்.
டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் கூட உள்ள பொதுக்குழு சாதாரண கூட்டம் அல்ல அது உண்மையான பாமக ஓட மறு பிறப்பு.
வர தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று நம்ம கட்சியோட சின்னத்தை மீட்கணும். நாம் இழந்த கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுக்கணும் இந்த கட்சியை மறுபடியும் மக்களுக்கான கட்சியாக மாற்றுவதற்கான போராட்டம் இது.
அன்புமணி பக்கம் இருக்கிற என் தொண்டர்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புகிறேன் , தந்திரங்களுக்கு ஏமாந்து விடாதீர்கள். ஒரே ஒரு கேள்வி உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். பெத்த அப்பனுக்கே துரோகம் செய்தவர் நாளைக்கே இயக்கத்தையோ நம் மக்களையோ காப்பாற்றுவாரா ?எனக்கு வயசாயிடுச்சு இதுதான் எனது கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால் என் உடம்புல கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உங்களுக்காக போராடுவேன். கோபத்தில் அல்ல அரத்தோட அன்போடு நிற்பேன் .
ஊர் ஊரா ஓடி உழைச்ச என் தம்பிங்க என் பிள்ளைகள் எல்லோருக்கும் சேலத்துக்கு வரணும் என அழைப்பு விடுகிறேன். ஒருத்தர் கூட விடுபடக்கூடாது.
நாம எல்லாரும் கைகோர்த்த இந்த ஆலமரம் நிமிர்ந்து நிற்கும் மக்களுக்கான பாமகவை மீண்டும் உருவாக்குவோம்.
நீங்க நல்லா யோசி உங்க மனசாட்சி கிட்ட ஒரு முறை பேசுங்கள் நம்ம கட்சி ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி.இன்னைக்கு அங்கீகாரமே இல்லை நீங்க சிந்தித்துப் பார்த்தால் இதற்கு பின்னால் இருக்கிற உண்மை உங்களுக்கு புரியும்.
இது நம் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடைசி வாய்ப்பு இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்துவிங்கனு நம்புறேன்.
இந்த கட்சியோட நிறுவனராக மட்டுமல்லாமல் உங்கள் ஐயாவா நான் பேசுகிறேன். உங்களுக்காக சேலத்துக்கு நான் வாறேன்.
நம்புற சிலர் என்னை ஏமாற்றினாலும் என் மக்கள் எனக்காக வருவீங்க என் கூட நிற்பீர்கள் என நான் நம்புறேன்.
அன்பும்,உழைப்பும் என்றும் வெல்லும் நாடகமும் சோம்பேறித்தனமும் கண்டிப்பாக தோற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam