Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச)
கேப்டன் விஜயகாந்தின் உயரிய பணிகளையும் மனித நேயத்தையும் நினைவுகூர்ந்து, மரியாதையுடனும், அஞ்சலியுடனும் அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்த் திரையுலகின் மக்கள் நாயகனாகவும், அரசியலில் நேர்மையும் துணிச்சலையும் அடையாளமாகக் கொண்ட தலைவராகவும் விளங்கிய தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்படுகிறது.
எளிய மக்களின் வாழ்க்கையைத் திரையில் பிரதிபலித்த நடிகராக மட்டுமல்லாது, அதிகாரம் இல்லாமலேயே ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு துணை நின்ற மனிதநேயத் தலைவராக அவர் திகழ்ந்தார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றை சொல் அளவில் அல்லாது செயல் மூலம் நிரூபித்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, தனிப்பட்ட வாழ்வில் எளிமை என்பவை அவரது வாழ்வின் அடையாளங்களாக இருந்தன. மக்கள் மனதில் என்றும் உயிருடன் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தலைமுறைகள் கடந்து நிலைத்திருக்கும்.
அன்னாரின் நினைவு தினத்தில், அவரது உயரிய பணிகளையும் மனித நேயத்தையும் நினைவுகூர்ந்து, மரியாதையுடனும், அஞ்சலியுடனும் அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ