Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 29 டிசம்பர் (ஹி.ச.)
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (29-12-25) சேலத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4,300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்ததாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாம.க தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த செளமியா அன்புமணி நீக்கப்பட்டு, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. மேலும், ஸ்ரீகாந்தியை பா.ம.க செயல் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மேலும் , பா.மக கெளரவத் தலைவராக ஜி.கே.மணி, பொது செயலாள்ராக முரளிசங்கர், பொருளாராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கூறுகையில்,
ராமதாஸ் கிராம கிராமமாக கட்சியை வளர்த்த போது நீங்கள் எங்கே போனீர்கள்?. கட்சி அங்கீகாரம் ரத்து ஆன போது நீங்கள் என்ன கிழித்தீர்கள்? கட்சியை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு நான் தான் தலைவர் என்று சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்வோமா? பதவிகளை உழைத்து வாங்கினீர்களா?. உங்களின் மருத்துவர் பட்டமும், பதவிகளும் ராமதாஸ் கொடுத்தது.
அன்புமணி செய்வது அரசியல் அல்ல, பச்சை துரோகம், சுயநலம். இதையெல்லாம் நல்ல சகுணமாக தான் நான் பார்க்கிறேன். கட்சிக்கு இத்தனை நாளாக பீடை தானாக கலைந்து போய்விட்டது. துரோகிகளும் சுயநலவாதிகளும் போய்விட்டார்கள்.
ஜி.கே.மணியை திமுக கைக்கூலி, திமுக அடிமைகள் என்று மேடைக்கு மேடை சொல்கிறார்கள்.
திமுக கைக்கூலிகள், அடிமைகள் என எங்களை சொல்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிமைகள்.
இனிமேல் தான் அய்யாவின் ஆட்டத்தை பார்க்கப் போகிறீர்கள்.
25 எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்றத்திற்கு செல்வோம், ஆட்சியில் பங்கு பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b