Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 29 டிசம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் 108 வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (டிசம்பர்30)காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நாளை அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுதல் நடைபெறவுள்ளது. பின்னர் சிறப்பு பூஜைகள் முடிந்து அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே எழுந்தருளும் ஆண்டாள், ரெங்க மன்னாரை ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்கின்றனர்.
பின்னர் மாடவீதி, கந்தாடை வீதி வழியாக ராப்பத்து மண்டபத்திற்கு ஆண்டாள், ரெங்க மன்னார், பெரிய பெருமாள் எழுந்தருள்கின்றனர். அங்கு மங்களா சாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பத்தி உலாவுதல், அரையர் வியாக்கியானம், சேவா காலம், கோஷ்டி நடைபெறவுள்ளது.
பின்னர் மாலை 4:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்தானம் சேருகின்றனர்.
இதற்கான விழா முன் ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்களுடன் சேர்ந்து பக்தர்களும் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b