Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 3 டிசம்பர் (ஹி.ச.)
கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தவெக மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும், பல்வேறு கட்டங்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித்சரண், சோனல் வி மிஸ்ரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் சிபிஐ அலுவலகத்தில் முதல் நாளான நேற்று பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கண்காணிப்பு குழுவினர் இன்று சம்பவம் நடந்த இடமான வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து தவெக சார்பில் கரூர் மாவட்ட காவல்துறையிடம் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடமான உழவர் சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், மனோகரா கார்னர் உள்ளிட்ட இடங்களையும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போதுமத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN