Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 3 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் என்பது, அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடு ஆகும். இங்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 7-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று(டிச 02) மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் திருவிழாவின் 7 ஆம் நாளான இன்று (டிச 03) பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சைபூஜை, மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் உலா வருகிறார். தொடர்ந்து மலைக்கோவிலின் நான்கு திசைகள் மற்றும் தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, சொக்கப்பனை கொளுத்துதல் ஆகியவை நடைபெறவுள்ளன.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் கார்த்திகை திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இதில் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவு வாயில் தற்காலிகமாக அடைக்கப்படும்.
தொடர்ந்து மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b