Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
டித்வா புயலால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b