மகாராஷ்டிர மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து மீண்டும் ஒன்றிணையும் அஜித் பவார் - சரத் பவார்
மகாராஷ்டிரா, 30 டிசம்பர் (ஹி.ச.) இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார். சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ''மகாயுத
வரும் 15-ந்தேதி நடைபெறும் மகாராஷ்டிர மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து மீண்டும் ஒன்றிணையும் அஜித் பவார் - சரத் பவார்


மகாராஷ்டிரா, 30 டிசம்பர் (ஹி.ச.)

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.

சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.

அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே மகாயுதியில் உள்ள பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.

2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், எதிரணியில் உள்ள அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.

பிம்ப்ரி-சின்ச்வாட் எப்போதும் பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM