Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 31 டிசம்பர் (ஹி.ச.)
2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மதுபானகடைகள், பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்களை கூடுதல் நேரம் திறக்க கலால்துறை சிறப்பு உரிமம் வழங்கி உள்ளது.
அதேபோல் சில்லரை, மொத்த விற்பனை கடைகள் இரவு 11.30 மணி வரை திறந்திருக்க அனுமதித்து புதுச்சேரி அரசின் கலால்துறை அறிவித்து உள்ளது.
மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் கடற்கரை பகுதிகளில் நடைபெறும் என்பதால், அங்கு 70க்கும் மேற்பட்ட புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர ட்ரோன் கேமரா மூலமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஏதுவாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்க வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்துமிடங்களில் இருந்து கடற்கரைப் பகுதிக்குச் செல்வதற்கு 30 மின்சாரப் பேருந்துகள் காவல் பாதுகாப்புடன் இயக்கப்படும். புதுச்சேரி மாநில எல்லைகளில் வழிகாட்டுவதற்காக புதிய கியூஆர் குறியீட்டு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியூர் பயணிகள் எந்தப் பகுதிக்குச் செல்வது என்பதை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக அறிந்துகொள்ளலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டுக் கொண்டாடுவதற்கு புதுச்சேரி வரும் குழந்தைகளுக்கு கையில் பெற்றோரின் மொபைல் எண் கொண்ட பேண்ட் ஒட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN