Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 4 டிசம்பர் (ஹி.ச.)
திருடு போகும் ஸ்மார்ட் போன்களை கண்டறியவும், ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகளை தடுக்கவும், சஞ்சார் சாத்தி என்ற செயலியை கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, 'நாட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும், சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும். இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் போன்களில், 90 நாட்களுக்குள் நிறுவ வேண்டும். பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் இந்த செயலியை நிறுவ வேண்டும்' என, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
இதனால் குடிமக்களின் தனியுரிமை பறிக்கப்படுகிறது என்றும், மக்களை உளவு பார்ப்பதற்கான மத்திய அரசின் திட்டம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதை திட்டவட்டமாக மறுத்த தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,
'சஞ்சார் சாத்தி செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் அல்ல; தேவையில்லை என நினைத்தால் நீக்கி விடலாம்.
என்றார்.
இந்நிலையில், தொலை தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில்,
'சஞ்சார் சாத்தி செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஸ்மார்ட் போன்களில், அதை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என, மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுகிறது.'
என, குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM