Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)
வங்கக் கடலில் உருவான ‘டித்வா’ புயலின் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (டிச 04) காலை 07:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தென்னிந்திய பகுதி மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 5-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 6 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் மிதமான மழைபெய்யக்கூடும்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று (04.12.2025) காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b