Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 4 டிசம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி கிராமத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி சரோஜா (60) என்பவரது வீட்டை ஒட்டி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு, சரோஜா தனது வீட்டை ஒட்டி சாலை போடாமல், சற்று தள்ளி போடுங்கள் சாலை பணியில் ஈடுபட்டவர்களிடம் கூறியுள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்டதும் உடனடியாக அதிமுக முன்னாள் எம்பியும் எம்எல்ஏவுமாக இருந்த அர்ஜுனன், சாலை பணி நடைபெறும் இடத்துக்கு வந்து சரோஜாவிடம், ‘ நீ எனது நிலத்தில் சாலை போட சொல்கிறாயா? என்று அவரை சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட சரோஜா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.இதுசம்பந்தமாக சரோஜா கொடுத்த புகாரின்படி, மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
முன்னாள் எம்பி அர்ஜுனன் கொரோனா கால கட்டத்தில், ஓமலூர் டோல்கேட்டில் போலீசாரை தாக்கினார். அதிமுகவில் எம்பி, தேமுதிகவில் மாவட்ட பொறுப்பாளர் என பல்வேறு பதவியில் இருந்த இவர், தற்போது அரசியலில் இருந்து விலகி, விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b