Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 4 டிசம்பர் (ஹி.ச.)
தொடர் மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளதால், மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது; புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
திருவள்ளூர் மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகிறது. இதனால், சென்னை குடிநீர் ஏரிகளில் முக்கிய ஏரியான பூண்டி ஏரியிலிருந்து கடந்த நவ.27-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. சில நாட்கள் கழித்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால், உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 2,540 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,851 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம் 34.09 அடியாகவும் இருந்தது.
ஆகவே, பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று காலை 8 மணியளவில் பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN