Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ் திரை உலகின் பழம்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அவரது மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். ஏவிஎம் சரவணன் (வயது 86) தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அவரது மகன் எம்எஸ் குகன் நடத்தி வருகிறார்.
கடந்த இரு ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஏவிஎம் சரவணன், ஒரு மாதத்திற்கு முன்புதான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்தார்.
இந்த நிலையில் அவரது உயிர் இன்று (டிச 04) காலை 5.30 மணிக்கு பிரிந்தது. அவரது உடல் அஞ்சலிக்காக, ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார்.
அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b