Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 5 டிசம்பர் (ஹி.ச.)
கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் (டிச 04), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத் தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று
(டிச 05) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர்.
எதிர் மனுதாரர்கள், தர்கா உள்ளிட்ட மற்ற தரப்பினர் சார்பில் இந்த விவகாரத்தில் மனுத்தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் வீரா கதிரவன் முறையிடுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியானது இரு மதத்தினருக்குச் சம்பந்தப்பட்டது. எனவே இதில் நீதிமன்ற விவாதங்கள், நீதிபதிகள் குறித்து தேவையில்லாத வகையில் பொது வெளியில் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. தேவையில்லாத கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் என நீதிபதிகள் முன்பு முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த உயர் நீதிமன்ற நீதி மாண்புக்கு எதிராக எந்த ஒரு செயலும் செய்யக்கூடாது.
பொதுவெளியில் வதந்திகளைப் பரப்பும் வகையில் நீதிமன்ற உத்தரவுகள் குறித்தோ, நீதிமன்ற விவாதங்கள் குறித்தோ பரப்பக்கூடாது.
தங்களுடைய நோக்கங்களைக் கருத்துக்களாகத் தெரிவிக்கக் கூடாது. அதோடு நீதிமன்ற மாண்பைக் கடைப்பிடிக்க வேண்டியது அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை டிச 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்
Hindusthan Samachar / vidya.b