Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 5 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குற்றால அருவிக்கு சீசன் போது மட்டுமின்றி மற்ற நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தே காணப்படும்.
ஆனால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் குளிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். கடந்த வாரங்களில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் காணப்பட்டனர். குற்றால அருவிக்கு அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் இன்று
(டிச 05) சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குற்றால அருவியில் தண்ணீர் வரத்து மீண்டும் சீரானால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b