Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 6 டிசம்பர் (ஹி.ச.)
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, தனது 'சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற தலைப்பிலான மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை இன்று
(டிச 06) காஞ்சிபுரத்தில் தொடங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்குள்ளவர்கள் கவலைகள் அனைத்தையும் மறந்து சின்னப் பெண்களாக மாறிவிட்டீர்கள். அப்படிப்பட்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை தினமும் வாழ வேண்டும் என்பதே நம்முடைய உரிமை. இன்று போல் என்றும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இந்த உரிமைகளைக் கொடுக்க வேண்டியதுதான் அரசாங்கத்தின் கடமை. கல்வி, மருத்துவம், விவசாயம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. கடனை அரசாங்கம் கொடுக்கக் கூடாது, மருத்துவச் செலவைக் கொடுக்கக் கூடாது, பள்ளிப்படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை இலவசம், எந்த மருத்துவம் பார்த்தாலும் இலவசம் இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. இதுதான் பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறோம்.
விவசாயத்திற்கும் அனைத்தும் இலவசம். இவை அனைத்தும் உங்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டால் உங்களுக்குக் கடன் சுமை இருக்காது. இவை அனைத்தும் இலவசமாகக் கிடைத்தால், பெண்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் பட்டுப்புடவைகளை மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்ளலாம் என்றும், பொருளாதார முன்னேற்றம் பெண்களுக்கு அவசியம். குழந்தைகளின் வேலை மற்றும் வேலைவாய்ப்புகள் பெறுவது நம்முடைய உரிமை, அதைக் கொடுப்பது அரசின் கடமை.
ஊரக உள்ளாட்சியில் 500 வாக்குகள் மட்டுமே இருக்கும், வார்டு மெம்பராக வேண்டும் என்றால் 150 ஓட்டுகள் வாங்கினால் கூட போதும் வார்டு உறுப்பினராக ஆகிவிடலாம். சொந்தக்காரர்களின் வாக்குகளை வாங்கினால் மட்டுமே போதும் நீங்கள் வெற்றி பெற்று விடலாம்.
நீங்கள் வெற்றி பெற்றால் தான் மகளிர்கள் காண உரிமையைப் பெற முடியும். இங்கு நாம் சொல்கின்ற விஷயத்தை மக்களிடம் சென்று கொண்டு சேருங்கள். அதைக் கேட்ட பொதுமக்கள், அந்தப் பெண்ணுக்கு நிறைய தெரிந்திருக்கிறது, வெற்றி பெற வைக்கலாம் என வாக்களிப்பார்கள்.
நீங்கள் கவுன்சிலராக வெற்றி பெற்றால் சேர்மன் பதவி வரை வெற்றி பெறலாம். உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேடையில் இருந்த பெண்கள் அனைவருமே மதுக்கடையை ஒழிக்கப் போராடியவர்கள் மற்றும் சிறை சென்றவர்கள். சக்தி கமலம்மாள் உள்ளிட்டோர் மது ஒழிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கூட மதுக்கடைக்கு எதிராக பலர் போராடி இருக்கிறார்கள், அவர்கள் தான் மேடையில் இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பா.ம.க.வில் இருக்கும் மகளிர் நிர்வாகிகள் தான் கொடி பிடித்துக் கொண்டு உங்களுக்காக முன்னிருப்பார்கள்.
பெண்களின் குரலாக இவர்கள்தான் இருக்கிறார்கள், இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள். ஹீரோக்களைத் திரையில் தேடாதீர்கள், இங்கிருப்பவர்கள் தான் உங்களுக்காக ஓடி வந்து உதவி செய்வார்கள்.
உங்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்சினை, காவல் நிலையத்தில் பிரச்சினை என்றால், இந்த மேடையில் இருக்கும் நிர்வாகிகள் தான் ஓடி வந்து உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்கள்.
இவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களைத் தான் நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b