தமிழகத்தில் இன்று முதல் டிச.12ம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் இன்று (டிச 07) முதல் டிச.12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் மாவட்டங்களில் வடகிழக்கு
தமிழகத்தில் இன்று முதல் டிச.12ம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் இன்று (டிச 07) முதல் டிச.12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் தலா 5 செமீ, கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

தற்போது, தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று(டிச 07), இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், நாளை முதல் டிச., 12ம் தேதி வரை, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று, சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் டிச.8 முதல் 12-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் டிச 12 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b