முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி தொடர்பாக ஆலோசனை
சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.) 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (டிச 08) காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்த
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி தொடர்பாக ஆலோசனை


சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (டிச 08) காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் (எஸ்.ஐ.ஆர்.) ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.நாம் இவ்வளவு கடினப்பட்டு இருந்தாலும் பாதி கிணறு தான் கடந்துள்ளோம். ரிஃபிகேஷன் பணிகள் நிறைவடைந்து, நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வந்தால் தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும். எஸ்.ஐ.ஆர். பணிகள் வாக்குரிமையை பாதுகாக்கும் அடிப்படைப் பணியாக இருந்தால், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்பது நமது

வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பணியாகும்.

எனவே, நாம் அனைவரும் களத்தில் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது. எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இதை கூறவில்லை. இது தான் உண்மை. நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.

இதில் பயனாளிகளுடன் சேர்த்து, தி.மு.க.வினரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முந்தைய ஆட்சிக்காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நமது சிறப்பான பணிகளைப் பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக, பயனாளிகள் -தி.மு.க.வினர் - நடுநிலை வாக்காளர்கள் எனசேர்த்தால், 2 கோடியே 50 லட்சம் வாக்குகளை தாண்டுவது சாத்தியமே.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி.

இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின்மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன். நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம். இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

சி.பி.ஐ, ஈ.டி, ஐ.டி, தேர்தல் ஆணையம் இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். தினந்தோறும் ஏராளமான பொய்களை பரப்புவார்கள், போலியான பிம்பங்களை உருவாக்குவார்கள், ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்ச் செய்திகளை பரப்புவார்கள்.இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொள்கை தான் நமது பலம். நிர்வாகிகள் தான் நமது பலம். தீயாக உழைக்கும் தி.மு.க. தொண்டர்கள் தான் நமது பலம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள தி.மு.க. கட்டமைப்பு தான் நமது பலம். இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம் ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது கட்சியினர் உற்சாகத்துடன் செயல்பட வைக்க வேண்டும்.

அதற்காகத்தான், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற இந்தப் பரப்புரை. அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட மாநில நிர்வாகி முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரையும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க அழைக்க வேண்டும்.

அந்த வாக்குச்சாவடியில் மூத்த முன்னோடிகள் அல்லது ஏதேனும் அதிருப்தியாளர்கள் இருந்தால், அவர்களையும் தவறவிடாமல் அழைக்க வேண்டும். தேனாம்பேட்டையில், என் வாக்குச்சாவடியில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நானும் நேரடியாகப் பங்கேற்பேன். வீடு வீடாகச் செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாகச் செல்லுவதை உறுதி செய்யுங்கள்.

வீடுவீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கியதுண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். நான் இரவிலும் உறங்காமல் உழைத்து வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும். அதே அளவிலான உழைப்பை, உங்களின் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். ஒரு வாக்குச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம்.

எனவே, இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் மிக முக்கியமானது. உங்கள் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன்.

ஒவ்வொருவரும் தங்களது வாக்குச்சாவடிகளில் வென்று வருவீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன்.

என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். மீண்டும் வெல்வோம். வரலாறு படைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b