நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் விடுதலை
கொச்சி, 8 டிசம்பர் (ஹி.ச.) கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் திலீப்பின் ரகசிய உறவுகளை இன்னொரு நடிகை, அவரது முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியரிடம் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வாரியர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை


கொச்சி, 8 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் திலீப்பின் ரகசிய உறவுகளை இன்னொரு நடிகை, அவரது முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியரிடம் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வாரியர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதற்கு, குறிப்பிட்ட அந்த நடிகை தான் காரணம் என்று திலீப் முடிவு செய்ததாகவும், அவர் ஏற்பாடு செய்த கூலிப்படை, நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த போலீசார், நடிகர் திலீப் மற்றும் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட 8 பேரை கைது செய்து, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று (டிச 08) தீர்ப்பு வழங்கினார்.

அதில் பாலியல் வழக்கில் பெரும்பாவூரைச் சேர்ந்த பல்சர் சுனி உள்பட6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். பாலியல் துன்புறுத்தலில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பல்சர் சுனி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

பல்சர் சுனி, மார்ட்டின் அந்தோணி, மணிகண்டன், விஜீஸ், சலீம், பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளது.

அதே நேரம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்பதால் 7வது குற்றவாளியான நடிகர் திலீப்பின் நண்பரான சரத்தையும் 8வது குற்றவாளியான திலீப்பையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் டிசம்பர் 12ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வழக்குகளில் இருந்து அதிகாரமிக்க நபர்கள் தப்புவது வாடிக்கையாகி விட்டதாக நடிகைகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

இந்த தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நடிகர் திலீப் கூறியதாவது,

எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது.

எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b