Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 01 ஜனவரி (ஹி.ச.)
சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவிலில் இருந்து மேலும் அதிக அளவில் தங்கம் திருடப்பட்டுள்ளதாக, அதை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 4.5 கிலோ தங்கம் மாயமானது தொடர்பான இந்த வழக்கில் விஜயகுமாரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் கோவில் கருவறைக்கு வெளியே உள்ள தங்கத்தாலான இரு துவார பாலகர்கள் சிலைகள் செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன.
அப்போது அவற்றின் மொத்த எடை கோவில் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட இரு சிலைகளையும், எடைபோட்டுப் பார்த்தபோது அவற்றின் எடை 4.5 கிலோ குறைந்திருந்தது.
இந்நிலையில் தங்க திருட்டில் கைதாகியுள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றி,சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் சிஇஒ பங்கஜ் பண்டாரி, பல்லாரியில் நகைக்கடை நடத்தும் கோவர்தன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளதாக கொல்லம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சன்னிதான கதவு, துவாரபாலகர் சிற்பங்கள் மற்றுமின்றி கதவுக்கு மேல் உள்ள பல பாகங்களும் திருடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam