Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 10 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. இக்கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகின்றது.
அழகிய கடற்கரையோரம் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்யவே பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும்.
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும் உள்வாங்கியும் காணப்பட்டு வருகிறது. கடந்த வருடம் கடல் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுமார் 6 அடி உயரத்திற்கும் 100 அடி தூரத்துக்கும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பக்தர்கள் கடலுக்குள் இறங்கி நீராட முடியாத நிலை உள்ளது. தற்போது கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடலுக்குள் இருக்கும் பாறைகள் அதிக அளவு வெளியே தெரிகிறது. அதன் அருகே நீராடுபவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே கோவில் நிர்வாகம் சார்பில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் அந்த இடத்தை தாண்டி நீராட அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்படுள்ள இடத்தில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b