Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 10 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பேரூராட்சியில், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான ஜீவசமாதி மற்றும் வழிபாட்டுத் தலமாக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் உள்ளது.
இங்கு அருணாசல சுவாமியின் ஜீவசமாதி சிவலிங்கத்துடன் அமைந்துள்ளது, அவர் நோய் தீர்க்கும் சக்திகொண்டவராகக் கருதப்பட்டு, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா ஜனவரி 18ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம், மாலை 6 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக்காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடைபெறவுள்ளது.
ஜனவரி 19 ம்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தல் தாகசாந்தி, இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சி நடைபெறவுள்ளது.
தை அமாவாசை நிறைவு விழா 20ம்தேதி (செவ்வாய் கிழமை) நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலிலைச் சயனம், மங்கள தரிசனம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தை அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், சாலை மற்றும் மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்.
Hindusthan Samachar / vidya.b