Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
பயணிகள் நெரிசல் மிக்க வழித்தடங்களில், கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து அளித்த பரிந்துரைகளை ஆய்வு செய்த ரயில்வே வாரியம், 9 ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் இடையே, 3 அம்ரித் பாரத் ரயில்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி ஜன.17, 18-ம் தேதிகளில் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக தொடங்கவுள்ள 9 ரயில்களில், தாம்பரம் - மேற்கு வங்கம் மாநிலம் சந்திரகாச்சி இடையே ஒரு அம்ரித் பாரத் ரயிலும் (வண்டி எண்.16107-16108), மேற்குவங்கம் மாநிலம் நியூஜல்பைகுரி - திருச்சி இடையே ஒரு அம்ரித் பாரத் ரயிலும் (20609-20610), நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி இடையே ஒரு அம்ரித் பாரத் ரயிலும் (20604-20603) இடம் பெற்றுள்ளன.
வந்தே பாரத் ரயிலுக்கு இணையாக வேகமும், பாதுகாப்பும் கொண்ட அம்ரித் பாரத் ரயிலில், ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணிக்கலாம். எல்எச்பி பெட்டிகள் இருக்கும். ‘சிசிடிவி’ கேமரா, பயணிகள் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புறத் தோற்றம், நவீன ஓட்டுநர் அறை உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இருப்பதால், பயணிகள் செல்ல வசதியாக இருக்கும்.
அம்ரித் பாரத் ரயில்கள் அறிவிப்புக்கு ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதவிர, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின், முதல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், அசாம் மாநிலம் காமாக்யா - மேற்குவங்கம் மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்படுகிறது.
வாரத்தில் புதன்கிழமை தவிர, மற்ற நாட்களில் இயக்கப்படும். இந்த தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில், 16 ‘ஏசி’ பெட்டிகள் இருக்கும். பயணிகளை கவரும் வகையில் ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் உள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு பெட்டி யில் வெந்நீரில் குளிக்கும் வசதி உள்ளது. ஒவ்வொரு இருக்கைக்கும் படிப்பதற்காக எல்இடி மின் விளக்கு, மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயின்ட், குடிநீர் பாட்டில் வைப்பதற்கும், பை வைப்பதற்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b