Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 11 ஜனவரி (ஹி.ச.)
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சேலை வழங்கப்படாதது குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அறிவித்தபடி பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நியாய விலை கடைகளுக்கு சென்ற பல பெண்கள், சேலை இல்லாமல் பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டதை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் இந்த விவகாரம் கடும் அதிருப்தியை உருவாக்கியது.
தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்கு சேலை மற்றும் ரூ.3000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனை தமிழக முதலமைச்சரும் நேரடியாக தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். தொடக்க நாளில் பெரும்பாலான இடங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதன் அடுத்தடுத்த நாட்களில் சில பகுதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.
ராமேஸ்வரம் நகரின் 3வது வார்டில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது பெண்களுக்கு சேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அங்கிருந்த நியாய விலை கடை பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்தபடி அனைத்து பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சேலை இல்லாமல் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறி கடை முன்பு திரண்டு நின்றதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற சென்ற பெண்கள் சேலை குறித்து கேட்டபோது, “சேலை குறைவாக வந்திருக்கிறது” என்ற பதிலையே நியாய விலை கடை பணியாளர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசு அறிவிப்புக்கும், நடைமுறை விநியோகத்துக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
பொங்கல் பண்டிகை என்பது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை தர வேண்டிய நேரம். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு வழங்கும் இந்த பரிசுத் தொகுப்பு பெரிய ஆதரவாக இருக்கும் நிலையில், அதில் குறைபாடுகள் இருப்பது பெண்களை மனவேதனைக்கும் எரிச்சலுக்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் அறிவித்தபடி வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபோன்ற முறைகேடுகள் அல்லது குறைவான விநியோகம் தொடர்ந்தால், அரசு மீது உள்ள நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சேலை வழங்கப்படாத நியாய விலை கடைகளில் குறையை சரி செய்து, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு அறிவித்தபடி முழு பொங்கல் பரிசுத் தொகுப்பையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு காண்பார்களா என்ற எதிர்பார்ப்பில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN