இன்று முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி
ராமேசுவரம், 12 ஜனவரி (ஹி.ச.) ராமேசுவரம், பாம்பன் பகுதியில் கடந்த 5 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது. பலத்த சூறாவளி காற்று வீசியதால் கடந்த 10-ந்தேதி அன்று சென்னை, மதுரை, திருச்சி, தாம்பரம
இன்று முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி


ராமேசுவரம், 12 ஜனவரி (ஹி.ச.)

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் கடந்த 5 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது.

பலத்த சூறாவளி காற்று வீசியதால் கடந்த 10-ந்தேதி அன்று சென்னை, மதுரை, திருச்சி, தாம்பரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ராமேசுவரம் வந்த அனைத்து ரெயில்களும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இயக்கப்படாமல் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டன.

இதனிடையே வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்த நிலையில் பாம்பன் பகுதி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

காற்றின் வேகம் குறைந்ததுடன் கடல் சீற்றமும் இல்லாததால் ராமேசுவரத்திற்கு நேற்று சென்னையில் இருந்து வந்த சேது எக்ஸ்பிரஸ், சென்னை விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை மற்றும் திருச்சி பயணிகள் ரெயில், திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ், தாம்பரம் ரெயில் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாகவே வந்தன.

புயல் சின்னம் காரணமாக கடந்த 5 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட ஊர்களில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ராமேசுவரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் மீன்துறை அதிகாரிகளால் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM