அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவதான் எனது போராட்டம் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
நீலகிரி, 13 ஜனவரி (ஹி.ச.) காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (ஜனவரி 13) தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து மைசூரு வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை,கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் வ
அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவதான் எனது போராட்டம் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி


நீலகிரி, 13 ஜனவரி (ஹி.ச.)

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (ஜனவரி 13) தமிழகம் வந்துள்ளார்.

டெல்லியில் இருந்து மைசூரு வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை,கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கூடலூர் வந்தடைந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் கேரள எல்லை என்பதால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களும் ராகுல் காந்தியை வரவேற்றனர்.

ராகுல் காந்தி தனியார் பள்ளிக்கு வந்தவுடன் பாரம்பரிய நீலகிரி மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழங்குடியினருடன் இணைந்து ராகுல் காந்தி உற்சாகமாக நடனமாடினார்.

கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ-மாணவியர் மத்தியில் உரையாற்றினார்.

மாணவர் ஒருவர் தமிழில் ராகுல் காந்திக்கு பொங்கல் வாழ்த்து கூற, அவரும் தமிழில் திருப்பி பொங்கல் வாழ்த்து கூறினார்.

இதனை தொடர்ந்து பள்ளியின் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து ராகுல் காந்தி பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

இந்த விழாவில் மாணவ-மாணவியர், பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில் கூறியதாவது,

மழையில் குழந்தைகளை உட்கார வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இது தகவல்களின் காலம், ஏராளமான தகவல்கள் எளிதில் கிடைக்கின்றன. தகவல்களை அறிவாக மாற்றும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே பள்ளிகளின் கடமை.

தகவல்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டால் இந்த உலகமே மோசமானதாகி விடும். பள்ளி பருவத்தில் நான் மிகவும் குறும்புக்கார சிறுவனாக இருந்தேன்.

விடுதியில் தங்கி படித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

ஆனால் மகிழ்ச்சியாக இல்லை என பெற்றோரிடம் கூறினேன். பெற்றோரை அடிக்கடி வர வைப்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினேன்.

நான் ஆசிரியர்களால் கையாள கடினமான மாணவனாகவே இருந்தேன். கல்வி என்பது மிகவும் மிகுந்த செலவாவதாக இருக்கக் கூடாது. கல்வி வழங்குவதில் அரசின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். உற்பத்தி, சிறு, குறு நிறுவனங்களில் அதிக வேலைகளை உருவாக்கும் நிலையை அடைய வேண்டும். நாட்டில் கல்வி முறை மட்டுமின்றி இந்தியாவில் பலவற்றையும் மாற்ற வேண்டியுள்ளது.

கல்விக்கு அப்பால் உற்பத்தி பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலை நோக்கு சிந்தனை கொண்டவர்கள்.

பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும். மக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவதான் எனது போராட்டம். 20 ஆண்டு பொதுவாழ்க்கையில் பணிவே தலைவர்களின் முக்கிய பண்பாக இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி.மீண்டும்

மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.

Hindusthan Samachar / vidya.b