Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 13 ஜனவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டத்தின் தென்கோடி பகுதியான பணகுடி, ராஜபுதூர், மாவடி,
வடலிவிளை, பனங்காட்டுவிளை
ஆகிய பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவு உள்ளது.
எனவே தான் இந்த ஊர்களின்
பெயர்களோடு பனை சம்பந்தமான பெயர்களும் இணைந்து இருக்கும். கற்பகத்தரு எனப்படும் பனைமரங்களை ஆதாரமாகக் கொண்டே இப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரம் இருந்து வந்துள்ளது.
இப்பகுதிகளில் உள்ளவர்களால் விளையாட்டாக சொல்லப்படும் ஒரு
விடுகதை முட்டையிடும், சட்டை கழற்றும் 3 மாதம் அடைகாக்கும், நாக்கை நீட்டும் படம் எடுக்கும் நாயல் நாண பாம்பும் அல்ல - அது என்ன? விடை - பனங்கிழங்கு. ஆம்.
பனம்பழத்தை தோலூரித்து மண்ணுக்குள் புதைத்து மூன்று மாதம் வைத்த பின்பு தான் பனங்கிழங்கு வெளிவரும். செம்மண் தேரி காடுகளில் மட்டும் விளையும் நார் சத்து
மிக்கபனங்கிழங்குகளுக்கு தமிழகமெங்கும் மவுசு அதிகம். ஒரு காலத்தில்
இப்பகுதியில் உள்ள பணகுடி, குட்டம், உவரி, கூடுதாழை ஆகிய பகுதிகளில் இருந்து
பனங்கிழங்குகள் சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி ஆகி வந்தன.
பனை சார்ந்த தொழில்கள் இன்று நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறது. பனையேறும் தொழிலாளர்கள் பலர் இன்று வெவ்வேறு மாற்று
தொழிலுக்கு மாறிவிட்டார்கள்.
இதனால் பதனீர் இறக்குதல், கருப்பட்டி
தயாரித்தல், பனைவெல்லம் தயாரிக்கும் தொழில் முற்றிலும் நலிவடைந்த நிலையில் உள்ளது.
பனைமர தோட்டங்களும் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகிறது. இதனால் பனங்கிழங்கு உற்பத்தி
சமீப வருடங்களாக குறைந்து வருகிறது. இதனால் கடந்தாண்டு மழை இல்லாததால் 25 கிழங்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை
பெய்ததால் 120 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு பருவமழை அதிகம் பெய்ததால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு விற்பனை சுடுபிடிக்க
தொடங்கியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு அதிக அளவு இலாபம் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam