Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலக ராணுவ அணிவகுப்பு மைதானத்தின் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் பங்கேற்று பொங்கலிட்டு தலைமைச் செயலக பணியாளர்களுக்கு வழங்கினார் .
முதன்முறையாக தலைமைச் செயலக வளாகத்தினுள் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்குபெற்ற அரசுத் துறைகளின் செயலாளர்கள் , அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்களும் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டையிலும் , பெண் செயலாளர்கள் புடவை அணிந்தும் விழாவில் பங்கு பெற்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி மட்டும் வேட்டி சட்டை அணியாமல் வழக்கமான முறைப்படி டிராக் வபேன்ட் , டி- ஷர்ட் அணிந்து பங்கு பெற்றார்.
நிகழ்வில் தலைமைச் செயலக பணியாளர்களுக்கு முன்பாக பேசிய முதலமைச்சர் , எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடையும் நோக்குடன் திராவிட மாடல் அரசு பயணிக்கிறது , தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தலைமைச் செயலக பணியாளர்கள் நேரம் காலம் பாராமல் உழைக்கின்றனர் அவர்களோடு இணைந்து சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி என்று வாழ்த்துரை வழங்கினார்.
முதலமைச்சர் வருகை தரும் முன்பே பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டு தயாராக இருந்தது. முதலமைச்சர் அவற்றை எடுத்து பணியாளர்களுக்கு பரிமாறி, தானும் அருந்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ