தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 11 பேர் கைது
திருப்பூர், 14 ஜனவரி (ஹி.ச.) கறிக்கோழி நிறுவனங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 11
Tamilaga Vivasayigal Pathukappu Sangam


திருப்பூர், 14 ஜனவரி (ஹி.ச.)

கறிக்கோழி நிறுவனங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள், நீண்ட காலமாக போதிய கூலி வழங்கப்படாமல் சுரண்டப்படுவதாகவும், தற்போதைய செலவுகளுக்கு ஏற்ற வகையில் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கறிக்கோழி நிறுவனங்களில் குஞ்சுகள் தேக்கம் அடைந்து, தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உடுமலையில் கூலி உயர்வு கேட்டு அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக அமைதியான முறையில் போராடிய நிலையில், அவர்களை குற்றவாளிகளைப் போல் நடத்தி சிறையில் அடைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் நடத்துவது எந்த சட்டத்திற்கும் எதிரானது அல்ல என்றும், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் எதிர்கொள்ளும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூலி உயர்வு வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் பாரபட்ச அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், கறிக்கோழி பண்ணை நிறுவனங்களின் அழுத்தத்திற்கு காவல்துறை அடிபணிந்து செயல்படுவதாகவும், அதனால் தான் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் விவசாயிகளை அச்சுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஈசன் முருகசாமி உள்ளிட்ட 11 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை ஒடுக்குவதன் மூலம் அவர்களின் உரிமை கோரிக்கைகளை அடக்கிவிட முடியாது என்றும், விவசாயிகள் ஒன்றிணைந்து தங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடுவார்கள் என்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக நாட்டில் அறவழிப் போராட்டத்திற்கு இடம் இருக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் குரலை ஒடுக்கக் கூடாது என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN