Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு விழாவையொட்டி கடந்த மாதம் 21 ஆம் தேதி மலை மீது உள்ள தர்காவிற்கு அருகில் இருக்கும் கல்லத்தி மரத்தில் பிறை கொடியேற்றப்பட்டது.
இந்த நிலையில் அந்த கல்லத்தி மரம் கோவில் இடத்திற்கு சொந்தமாக இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்த கொடி தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா தரப்பில் கொடியேற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வருவாய் துறை, அறநிலையத்துறை மற்றும் காவல் துறையினர் சேர்ந்து மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை அகற்றி உள்ளனர்.
மேலும் தற்போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு பின்பு தான் கொடியேற்றப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய வகையில் கல்லத்தி மரத்தில் கொடியேற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது கொடி அகற்றப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்கா தரப்பில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம் பரபரப்பாக நடைபெற்ற வரும் சூழலில் தற்போது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா கொடியேற்றியதாக கூறி அந்த கொடியை கோவில் நிர்வாகம் வருவாய்த்துறை காவல்துறை சேர்ந்து அகற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN