Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 16 ஜனவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே பஞ்சர் கடை நடத்தி வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பாக்குடி அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (47). இவர் பஞ்சர் கடை நடத்தி தனது குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊருக்கு வெளியே உள்ள பனைமரத் தோட்டத்தில் சரவணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சரவணனின் உடலில் பல இடங்களில் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என சந்தேகம் எழுந்துள்ளது.
கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணனுக்கு முன்விரோதம் ஏதேனும் இருந்ததா, அல்லது வேறு காரணங்களுக்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க பாப்பாக்குடி போலீசார் வலைவீசி தேடி
வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN