Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள் வசதியாக சென்னைக்கு திரும்புவதற்கு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.
அந்த வரிசையில், வருகிற 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெற்கு ரயில்வே ஒரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
இது நெல்லையிலிருந்து தாம்பரம் வரை ஒரே மார்க்கத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஆகும்.
நெல்லையிலிருந்து வருகிற 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்.06178), மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக பயணித்து மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பித்து சில நொடிகளிலேயே இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்நிலையில், நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த ரயிலில் இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி அமைப்பு - 10 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM