சினிமாவை கலை, கலாச்சார விழும்பியங்களாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக பார்க்கக் கூடாது - வைரமுத்து
சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.) திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள டைகர் வரதாச்சாரி ரோடு பூங்காவில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் தமிழறிஞர்கள், கல்விய
Vairamuthu


சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள டைகர் வரதாச்சாரி ரோடு பூங்காவில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து குறள் இசை பாடல்கள் பாடப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து,

திருவள்ளுவர் பிறந்த நாளான இன்று மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்ட தமிழ்நாட்டு அரசுக்கு என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிறக்கும் நாளெல்லாம் திருவள்ளுவர் திருநாளாக இருந்தால் நன்றாக இருக்கும்.

இந்தியாவின் தேசிய இனங்களின் தாய் மொழிகள் எல்லாம் மதிக்கப்பட வேண்டும். தமிழ் மட்டும் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் தாய் மொழியை நாங்கள் பேணுவது மாதிரியே இந்தியாவின் எல்லா தேசிய இனங்களும், தாய் மொழியை பேண வேண்டும். மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்த நேரத்தில் சாகித்ய அகாடமி பரிசு குறித்து ஒரு கருத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சாகித்ய அகாடமி விருது அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதில் ஒரு சிக்கல் இருப்பதாக அறிவுலகம் அஞ்சுகிறது.

சாகித்ய அகாடமி ஒரு தன்னாட்சி அமைப்பாக திகழ வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு காலத்தில் ஆணை இடப்பட்டு இயங்கி வந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.

சாகித்ய அகாடமியின் தன்னாட்சி உரிமை பறிக்கப்படுவதாக இந்தியாவின் எல்லா மொழிகளும் கருதுகின்றன. இது படைப்பாளிகளுக்கு, அவர்களின் படைப்புச் சுதந்திரத்திற்கும் எதிரானது என்று அறிவுலகம் கருதுகிறது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பும் படியும் கேள்வி எழுப்பும்படியும் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கப்பாண்டியன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தொலைபேசியில் நான் என் கவலையை தெரிவித்திருக்கிறேன்.

நாடாளுமன்றம் கூடும் போது இது குறித்து வினா எழுப்பி இந்திய தேசிய மொழிகளின் உரிமைகளை மீட்டுத் தருமாறு நான் அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அரசியல் தலையீடு உள்ளதா? என்று கேட்ட போது, சினிமாவை கலை மற்றும் கலாச்சார விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக பார்க்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். அரசியலைக் கடந்து சமூகத்தின் கலையாக திரைப்படம் கருதப்பட வேண்டும்.

திரைப்பட விதிகள் அவ்வப்போது தளர்த்தப்படுவதாகவும் மாற்றப்படுவதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய புதிய விதிகள் வகுக்கப்படுவதாகவும் அறிகிறேன். அதை மாற்றி ஒரு விதி நிரந்தரமான விதி என்று வகுக்கப்பட்டால், எல்லா படங்களுக்கும் நிச்சயமாக தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் புத்தாண்டு தை மாதத்தில் திணிக்கப்பட்டது என்று கூறியது குறித்த கேள்விக்கு, தமிழ் புத்தாண்டு திணிக்கப்பட்டதல்ல. 60 ஆண்டுகள் முன்பு பாவேந்தர் பாரதிதாசன், மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என குறித்துக் கொடுத்ததை பின்பற்றுகிறோம் என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN